எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிக்கும் என்பதால் முட்டை ஒன்றின் விலை 80 ரூபாயை தாண்டும் என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கால்நடை மருத்துவர் சிசிர தெரிவித்தார்
அரச கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தற்போது முட்டையின் தேவை வேகமாக குறைந்துள்ளதால் சந்தையில் முட்டை விலை 50-60 ரூபாய் என்ற அளவில் உள்ளது. ஆனால், வருங்காலத்தில் முட்டை நுகர்வு அதிகரிப்பதால், முட்டையின் விலை வேகமாக அதிகரிக்கலாம்.
உணவுப் பாதுகாப்பை அடைவது இன்று பெரும் சவாலாக மாறியுள்ளது. இன்று நாம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, மற்றும் உணவு பற்றாக்குறை பற்றி பேச வேண்டும். இந்தப் பிரச்னை சிறு குழந்தை, கர்ப்பவதி தாய் மற்றும் பாலூட்டும் தாய் ஆகியோரை பாதித்துள்ளது.
இன்று புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களின் விலையேற்றமும், தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. மக்களுக்குத் தேவையான விலங்கு புரதங்களைத் தடையின்றி வழங்குவது கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் அனைத்துப் பிரிவுகளின் பொறுப்பாகும்.
ஆனால், அதிகாரிகளின் பிரச்னைகளை விவாதிக்க மட்டுமே மாநாடுகள் உள்ளன. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டம் அவர்களிடம் இல்லை. அத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டால், அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மின் கட்டணம், எரிபொருள் விலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால், சிறு, கோழி மற்றும் பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த நேரத்தில்தான் கால்நடை மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அந்த பணிகளை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு வாரத்துக்கு 4 லீற்றர் பெற்றோலே வழங்கப்படுகிறது. கள அதிகாரிகளை பாதிக்கும் இப்பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் உணவு பாதுகாப்புக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்றார்.