முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில், நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டதா என்பது தொடர்பான வழக்கு திகதியிடப்பட்டது!

0
146

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தில், நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டதா என்பது தொடர்பான வழக்கு, எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கில், கடந்த 12 யூன் 2022 ற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்கு மேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது எனவும், முல்லைத்தீவு நீதிமன்றம், 19 யூன் 2022 அன்று, கட்டளை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில், கடந்த 22 செப்ரெம்பர் 2022 அன்று, முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்ற போது, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையானது மீறப்பட்டதாகவும், அவ்வாறு மீறப்பட்டதாலேயே, கடந்த 21 செப்ரெம்பர் 2022 அன்று, தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாகவும், குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள், புகைப்பட ஆதாரங்களை, மன்றில் சமர்ப்பித்தனர்.
அதனடிப்படையில், அவ்வாறு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பில், பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர், இன்று, மன்றில் தோன்றி விளக்கமளிக்க வேண்டும் என, முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, இன்று, தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் அனுர மானதுங்க நீதிமன்றில் முன்னிலையானதுடன், தொல்லியல் திணைக்களம் சார்பில், சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்தனர்.
அத்துடன், பொலிசார் மற்றும், குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகளும், மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைகள், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றதுடன், இரு தரப்பினரும், தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு சமர்ப்பங்களையும் செவிமடுத்த நீதவான், இது தொடர்பான கட்டளை ஒன்றை வழங்குவதற்காக, எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு, வழக்கை திகதியிட்டார்.
இதன் போது, குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் சார்பாக, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனும், நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.