முல்லைத்தீவு வட்டுவாகல், கடற்படை முகாமுக்கான காணி அளவீடு நிறுத்தம்

0
204

முல்லைத்தீவு வட்டுவாகல், ‘கோட்டாபய கடற்படை கப்பல்’ கடற்படை முகாமுக்காக, இன்று, பொது மக்களின் 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு முயற்சி, இன்று, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச மக்களின் எதிர்ப்பால், காணி அளவீடு கைவிடப்படுள்ளதுடன், நில அளவீட்டுக்காக சென்ற நில அளவை திணைக்கள அதிகாரிகள், திரும்பிச் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை, கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து, பாரிய கடற்படை முகாம் ஒன்றை அமைத்துள்ள கடற்படையினர், அந்த காணிகளை, படை முகாமின் தேவைக்காக, கடந்த சில வருடங்களாக, நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு, பல தடவைகள், நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள், காணி உரிமையாளர்களான மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.
காணி எடுத்தற் சட்டம் அத்தியாயம் 450 – 5 ஆம் பிரிவின் 1 ஆம் உட்பிரிவின் பிரகாரம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம், கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுது.
இந்த நிலையில், காணி உரிமையாளர்களான தமிழ் மக்களை, காணி ஆவணங்களோடு வருகை தந்து, கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய, எல்லைகளை அடையாளம் காட்டுமாறு, நில அளவை திணைக்களத்தால், பல தடவைகள், காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு, அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.
இவ்வாறு காணி சுவீகரிப்புக்கான அளவீடுகள் மேற்கொள்ள முற்பட்ட போது, தொடர்ச்சியாக, மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால், அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை.
இதனால், இன்று, மீண்டும் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் ஏற்பாடாகி இருந்த நிலையில், 15 காணி உரிமையாளர்கள், இழப்பீடுகளை பெற்றுக்கொண்டு, காணிகளை கடற்படைக்கு வழங்க இணக்கம் தெரிவித்து, அளவீடுக்கு வருகை தந்திருந்தனர்.
அத்துடன், மேலும் ஒரு தொகுதி மக்கள், தமது காணிகளை சுவீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன் ஆகியோருடன் இணைந்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, காணி சுவீகரிப்பு தொடர்பில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காணி உரிமையாளர்களை அழைத்து, பொதுவான ஒரு கூட்டத்தை, மாவட்ட செயலகத்தில் கூட்டி, முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே காணி உரிமையாளர்களான மக்களை, தனியே மாவட்ட செயலகத்திற்கு அழைத்து, கூட்டத்தை வைத்து முடிவுகளை எடுத்த பின்னணியில், சில காணி உரிமையாளர்களுக்கு, புலனாய்வு தரப்பின் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக, நாடளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
குறித்த கோரிக்கை அடங்கிய கடிதமும், காணி உரிமையாளர்களின் கையொப்பத்துடன், நில அளவை திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
அதனையடுத்து, அளவீட்டு பணிகளை நிறுத்தி, நில அளவை திணைக்கள அதிகாரிகள், திரும்பிச் சென்றுள்ளனர்.
மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், கலகம் அடக்கும் பொலிஸார் பிரசன்னமாக்கிருந்ததுடன், அதிகளவான புலனாய்வாளர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததை, அவதானிக்க முடிந்ததாக, மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.