மூடியை திருடிய மூவருக்கு பிணை!

0
8

மூடியை திருடச் சென்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நகரசபை சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவர் உட்பட 3 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமாக வடிகான் கொங்கிறீற் மூடியை திருடச் சென்ற 3 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், புதன்கிழமை (23) இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டுபேர் கொண்ட  சரீரபிணையில் செல்ல உத்தரவிட்டு எதிர்வரும் செட்டம்பர் 23 ம் திகதி வழக்கை தவணையிட்டு ஒத்திவைத்தார்.

காத்தான்குடி நகரசபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர் அவரது வட்டாரமான கல்முனை பழைய வீதியிலுள்ள வடிகான் மூடி ஒன்று இல்லாமல் பலவருடங்களாக இருந்துள்ளதுடன் அந்தபகுதி பாடசாலை மாணவர்கள் பள்ளிவாசலுக்கு செல்வோர் உட்பட அந்த வீதி ஊடாக பாதசாரதிகள் பயணிக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவந்துள்ளனர்

இது தொடர்பாக சுயேச்சைக்குழுவின் நகரசபை உறுப்பினரின் வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உறுப்பினரிடம் வடிகான் மீது இருந்த மூடி இல்லாததால் அந்த  மூடியை அமைத்து தருமாறு கடித மூலம் கோரிக்கையிட்டனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக குறித்த உறுப்பினர் நகரசபை தவிசாளரிடம் கடிதம் மூலமாகவும் வாய்மூலமாகவும் குறித்த பிரச்சனையை தீர்த்து தருமாறு கோரியுள்ளார் ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகியும் தவிசாளர் அதனை நிறைவேற்றிக் கொடுக்கவில்லை

இதன் காரணமாக நகரசபை உறுப்பினர் அந்த பகுதியில் உள்ள வடிகானுக்கு அருகாமையில் அனாதாரவாக வீதிக்கு அண்மித்த பகுதில் கைவிடப்பட்டிருந்து வடிகான் மூடி ஒன்றை  தனது சொந்த பணத்தில் இருந்து மணல் அகழ்வும் கனரக வாகனம் ஒன்றை 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வாடகையாக வழங்கி அதனை தூக்கி கொண்டு வடிகான் மீது வைததுள்ளார்.

இதனையடுத்து குறித்த சுயேச்சைக்குழு உறுப்பினர் தமது களஞ்சியசாலையில் இருந்த நகரசபைக்கு சொற்தமான வடிகான் மூடியை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நகரசபை களஞ்சியசாலை பொறுப்பாளர் முறைப்பாடு ஒன்றை  செவ்வாய்கிழமை (22) வழங்கியதையடுத்து உறுப்பினர்  உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்தனர்.  

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை  புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிராளிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி ஹக்கீம் தலைமையில் 5 சட்டத்தரணிகள் ஆஜராகி அந்த பகுதியில் வடிகான் மூடி இன்றி ஆபத்தாக கிடந்த வடிகான் மூடியை சீர் செய்வதற்காக அருகாமையில் இருந்த நகரசபைக்கு சொந்தமான மூடியை எடுத்து அந்த வடிகானை சீர் செய்தார் எனவும் அவர்களுக்கு பிணைகோரி சமர்பணம் முன்வைத்தனர்.

இதனையடுத்து  நீதவான் அவர்களை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் விடுவித்தார்.