மொட்டுக்கட்சியின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மனதை வென்று அடுத்த தேர்தலில் வெற்றிபெறலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைப்பாராயின் அது ஒரு போதும் நடக்காத விடயமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதனாது 2015ஆம் ஆண்டு அவரை பிரதமராக்குவதற்காக பாடுபட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மீது தாக்குதலை மேற்கொண்டமைக்கு ஒப்பானது.
ஆட்சிக்கு வருவதற்காக பாடுபடுபவர்கள் மீது ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தாக்குதல் மேற்கொள்வதையே அவர் வழமையான பணியாக முன்னெடுத்து வருகின்றார்.
கட்சியை சார்ந்தவர்கள், ஆதரவாளர்களுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை. சமுரத்தி கொடுப்பனவை வழங்கவில்லை. ஆதரவாளர்களை சவாலுக்கு உட்படுத்தினார்.
இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி உடைந்து ஐக்கிய மக்கள் சக்தி உருவானது.
இவ்வாறான சூழ்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் விளைவாகவே ஜனாதிபதியாகிய அவர் தற்போத ஆர்ப்பாட்டககாரர்களை பழிவாங்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட வருகின்றார்.
இதுவே அவரது இயல்புநிலை.
ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதன் மூலம் மொட்டுக்கட்சியின் ஆதரவாளர்களது மனதை வென்று அடுத்த தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்தால் அது அவரது கனவாகவே இருக்கும் என்றே நான் கூறுவேன்.
இந்த நாட்டில் செயற்பாட்டு ரீதியிலான இரு கட்சிகளாக ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் காணப்படுகின்றன.
எனவே ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒரு கட்சி இல்லை. அதேபோன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியும் இல்லை.
69 இலட்சம் மக்களின் ஆணையும் தற்போது இல்லை.
எனவே மொட்டுக்கட்சி ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மனதை வென்று அடுத்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று ஜனாதிபதி நினைப்பராயின் அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.