யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில், சாவகச்சேரி பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 87 கிலோ கேரள கஞ்சாவும், கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு, ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் ஆகியோரின் வழிகாட்டலில், சாவகச்சேரி பொலிஸாரால், குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, சங்குப்பிட்டி பாலத்தில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது, காருக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் கேரள கஞ்சாவுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும், வவுனியாவைச் சேர்ந்த 47 வயதான நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொடிகாமத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரே, தனக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக, சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, கொடிகாமத்தில் உள்ள வீடொன்று, இன்று அதிகாலை சுற்றிவளைக்கப்பட்ட போது, அங்கிருந்து 87.67 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் போது, சந்தேக நபர் தப்பியோடிய நிலையில், வீட்டில் இருந்த சந்தேக நபரின் தாயார் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.