யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் திறந்து வைக்கப்பட்டது.கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.நிலைய கட்டடத்தை நாடா வெட்டித் திறந்து வைத்த ஜனாதிபதி சுத்திகரிக்கப்பட்ட நீர்க் குழாயையும் திறந்து வைத்தார்.

இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் செயற்றிட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



