யாழ் திருவள்ளுவர் கலாசார மண்டபம் : பராமரிப்பது குறித்து ஆராய்வு

0
13

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்டு, இந்திய அரசாங்கத்தினால் பராமரிக்கப்பட்டு வரும், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, எதிர்காலத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், இன்று, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

மண்டப பராமரிப்புக்குரிய பொறுப்பை, இந்திய அரசாங்கம், கடந்த 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில், அதில் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில், யாழ்ப்பாணம் மாநகர சபை, அதனை செயற்படுத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் தெரிவித்தார்.

எவ்வளவு விரைவாக, மாநகர சபை பொறுப்பேற்று இயக்க முடியுமோ, அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என, ஆளுநர் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர்,

கலாசார மண்டபத்தை இயக்குவதற்கான இணை முகாமைத்துவக் குழுக் கூட்டம், 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் நடத்தப்படவில்லை எனவும், கூட்டத்தை நடத்த எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க முடியுமோ, விரைந்து முன்னெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இணை முகாமைத்துவ குழுவை, உள்ளூரை மையப்படுத்தியதாக உருவாக்குவது சிறப்பாக இருக்கும் எனவும், இந்தியத் தூதரகம், எதிர்காலத்தில் ஆலோசனை வழங்கும் ஒரு தரப்பாகவே இருக்கும் எனவும், இந்திய தூதுவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், கலாசார மண்டபத்தின் மாடிக் கட்டடத்தின் ஒவ்வொரு தொகுதிக்குமான பல்வேறு விதமான முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அது சாதகமானதொரு நிலைமை எனவும், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் குறிப்பிட்டார்.

தற்போது இந்தியத் தூதரக அதிகாரிகளே, மண்டபத்தை பராமரித்து வரும் நிலையில், நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, யாழ். மாநகர சபையினால் அதிகாரிகளை நியமிக்குமாறு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண நிர்வாகப் பகுதிக்கான பிரதிப் பிரதம செயலாளர் திருமதி எழிழரசி அன்ரன்யோகநாயகம், வடக்கு மாகாண நிதிப் பிரதிப் பிரதம செயலாளர் எஸ்.குகதாஸ், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.