யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார் சிறீதரன்

0
43

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது.

அதன்போது, வலி.வடக்கில் முன்னெடுக்கப்படும் மின் இணைப்பு விடயம் தொடர்பில் விவாதம் முன்வைக்கப்பட்டபோது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அவர்களது தனிப்பட்ட விடயங்களை முன்னிறுத்தியதாக மாறியது.

குறிப்பாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றவரது காதல் விடயங்கள், மோசடி மற்றும் நிதி மோசடிகள் முதலான பல விடயங்களை முன்னிறுத்தி அதிகாரிகள் முன்னிலையில் தர்க்கித்துக்கொண்டனர்.

இந்நிலையில் இந்த வாக்குவாதத்தை இடைநிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் வலியுறுத்தினார்.

எனினும், ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்பட்டது. 

இதனால் அங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார்.