யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்திற்க்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி

0
65

யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்திற்க்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை, கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று சாலை கடற்பகுதியில், குறித்த ஐவரும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டோரிடம் கடற்படை முகாமில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.