யுத்தக் குற்றங்களின் கதைகள் முடிகின்றனவா?

0
146

சஜித் பிரேமதாசவின் ஜக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைந்து வருகின்றனர்.
இதன் தொடர்சியாக, தற்போது இறுதி யுத்தத்தின் போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் சஜித்துடன் இணைந்திருக்கின்றார்.
இவர் சவேந்திர சில்வாவின் தலைமையில் இறுதி யுத்தத்தின் போது பணியாற்றிய ஒருவர்.
இவர் தலைமை தாங்கிய அதிரடிப்படையினர் மீது, பாலியல் வன்புணர்வு உட்பட பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இவ்வாறு இணைந்துகொண்ட இராணுவ அதிகாரி, ஜக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு மற்றும் அமுலாக்கப் பிரிவின் பிரதானியாகவும், நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இது எதனை உணர்த்துகின்றது? ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் ஏன் சஜித் பிரேமதாச அணியுடன் இணைகின்றனர்? முன்னர் அவ்வாறான பலரது கூடாரமாக ராஜபக்ஷக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன மட்டுமே இருந்தது.
ராஜபக்சக்கள் மக்கள் மத்தியில் அந்நியப்பட்டுள்ளதாக நம்பப்படும் சூழலில், இராணுவ அதிகாரிகளின் கூடாரமாக ஜக்கிய மக்கள் சக்தியே மாறிவருகின்றது.
இவ்வாறானவர்களை உள்வாங்கிக் கொள்வதில் சஜித் பிரேமதாசவும் எவ்வித தயக்கமும் காண்பிக்கவில்லை – ஏன்? 2009இல் யுத்தம் முடிவுற்ற போது, யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக நம்மப்படும் போர்க் குற்றங்கள் – மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் கள் பிரதான பேசுபொருளாக இருந்தது. 2012இல், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க ஆதரவு பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்புலத்தில், தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் நீதி மட்டுமே, பிரதான பேசுபொருளானது – வருடங்கள் தோறும் ஜெனிவாவிற்கு செல்லுதல் ஒரு பெரும் சாதனை போன்று நோக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில், தமிழ் கட்சிகள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டன.
ஆனால் தற்போது தமிழ் மக்களின் நீதிக்கான பயணம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி, ஒய்வு நிலை இராணுவ அதிகாரிகளின் கூடாரமாக மாறிவருவதை இந்த அடிப்படையில்தான் நோக்க வேண்டும்.
சஜித் பிரேமதாச, தமிழ் மக்களின் நண்பர் என்னுமடிப்படையில்தான், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தனர்.
அவ்வாறு வாக்களிக்குமாறுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
தமிழ் மக்களின் உணர்வுகளை தென்னிலங்கை தலைவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா – அல்லது, யுத்தத்தை வழிநடத்திய இராணுவத் தளபதி பொன்சேகாவிற்கே வாக்களித்த மக்கள் தொடர்பில் எதற்காக அலட்டிக் கொள்ள வேண்டுமென்று சஜித் எண்ணுகின்றாரா? அவ்வாறு சிந்தித்தால் அதில் குற்றம் காண்பதும் கடினம்தான்.
இவ்வாறான விடயங்களை தூர நோக்கில் ஆராயாமல் சம்பந்தன் அணி மேற்கொண்ட வரலாற்று தவறுதான் இவை அனைத்திற்குமான காரணமா? கடந்த பதின்நான்கு வருடகால தமிழர் நகர்வுகள், விடயங்களை முன் நோக்கி நகர்த்தவில்லை – அதேவேளை இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களையும் முன்நோக்கி நகர்த்தவும் இல்லை.
ஆனால் சர்வதேச விவகாரங்களை கையாளுவதான ஒரு கதையை கூறிக்கொண்டனர் – அவ்வாறாயின் தமிழர் அரசியல் எதை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது? இலங்கையின் மீதான மனித உரிமை சார்ந்த அழுத்தங்களை கண்டு தென்னிலங்கை தலைவர்கள் எவருமே அஞ்சவில்லை என்பதைத்தானே நிலைமைகள் காண்பிக்கின்றன.
இப்போது தமிழ் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? இதுவரை முன்வைத்து வந்த நீதிக்கான கோரிக்கைகள், இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், அதற்கும் மேலாக இனப்படுகொலை வாதம் – இவை அனைத் திற்கும் என்ன நடந்தது? ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல், சரத் பொன்சேகாவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைதான், அனைத்துத் தவறுகளுக்குமான ஆணிவேரா?