ரஞ்சனுக்கான போராட்டம் ஓயவில்லை – சஜித்

0
138

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரஜாவுரிமையோ, அரசியல் செய்யும் உரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ இன்னும் கிடைக்கவில்லை எனவும், ரஞ்சனை விடுவிக்கும் போராட்டம் ஓயவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நிகவரெட்டிய தொகுதிக் கூட்டம் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஓரளவு விடுதலையே வழங்கப்பட்டுள்ளது. அது அரசியலமைப்பின் 34ஆவது உறுப்புரையின் 1ஈ பிரகாரம் வழங்கப்பட்டுள்ள விடுதலை. இதன்பிரகாரம் அவர் சிறையில் கழிக்க வேண்டிய எஞ்சிய காலம் மாத்திரமே நீக்கப்பட்டுள்ளது. 34 வது உறுப்புரையின் இரண்டாவது பிரிவின் கீழ் அவருக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும். என்றாலும் அது நடக்கவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண விடுதலை வழங்குமாறு ஜனாதிபதிக்கு நினைவூட்டுகின்றோம். எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில், ரஞ்சன் ராமநாயக்கவை இன்னும் பாராளுமன்ற உறுப்பினராகவே கருதுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு அழைப்போம், அவருக்கு பாராளுமன்றக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும், நிறைவேற்றுக் குழுவின் நிரந்தர உறுப்புரிமையும் வழங்குவோம். ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படுவார். இத்துடன் நிற்காது ரஞ்சன் ராமநாயக்கவின் பூரண விடுதலைக்கு ஆகக்கூடிய அர்ப்பணிப்பை மேற்கொள்வோம். தற்போது சர்வகட்சி அரசாங்கம் பற்றி ஜனாதிபதி பேசுகின்ற போதிலும் உண்மையில் நடப்பது ஒன்று கூடி நாட்டையே விழுங்கக்கூடிய அனைவரும் உண்ணும் அரசாங்கத்தை உருவாக்குவதே. தற்பொழுது நாட்டின் முன்பே மூன்று கடன் மரணப் பொறிகள் இருக்கின்றன. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அந்த மூன்று மரணப் பொறிகளும் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பான எந்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் நாட்டுக்கு முன்வைக்கவில்லை.’