ரணிலின் ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை’

0
477

-அலசுவது இராஜதந்திரி-
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மியன்மாரில் தற்போது இராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியதை முன்னுதாரணமாகக் குறிப்பிட்டு இலங்கையும் முழுமையான இராணுவ ஆட்சியொன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் எச்சரிக்கை காலமறிந்ததொன்றாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் ஏற்கனவே ஏறத்தாள இராணுவ ஆட்சிக்கு சமாந்தரமான வகையில் நிர்வாக நடவடிக்கைகள் முன்னாள் இராணுவ அதிகாரிகளினால் பெரிதும் மேற்கொள்ளப்படுவதையே அவதானிக்க முடிகின்றது.

மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்பு , மற்றும் சீனாவின் ஆதிக்க விஸ்தரிப்பு என்பவற்றோடு இலங்கையில் எதேச்சையான அரசியல் போக்கு படிப்படியாக அதிகரித்துவரும் சூழலிலும் , எற்கனவே கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணைகளில் காணப்படுகின்ற அம்சங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் மனித உரிமைகள் காப்பகம் தனது இலங்கை குறித்த அறிக்கையை காரசாரமான முறையிலேயே எச்சரி;கையோடு வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை இத்தடவை தனது தவுறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த வேண்டும். இல்லையேல் சர்வதேச சமூகத்தினால் வைக்கப்பட வேண்டிய இடத்தில் இலங்கை வைக்கப்படும் என்பதையே சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.

93 பக்க கண்டன அறிக்கை
அதேசமயம் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தததின்போது அப்பாவி மக்களை காப்பாற்றத்தவறியதையும் மனித உரிமைகள் காப்பகம் தனது 93 பக்கங்களைக்கொண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பாக இத்தடவை கொண்டவரப்படும் தீர்மானங்களில் எத்தகைய குறைபாடுகளும் இருக்கலாகாது எனவும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மனித உரிமைகள் காப்பகம் இலங்கை குறித்த ஜெனிவா நடவடிக்ககைகளில் எதுவும் இசகு பிசகாக இருந்து விடலாகாது என்பதிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து நீதி நியாயங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கலாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேனை முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஜெனிவா விடயத்தை பொறுப்பாக கையாளுமாறு இன்றைய ஆட்சியாளர்களை கோரியுள்ளதுடன் சர்வதேச சமூகத்தின் கண்டனங்களுக்குள்ளாக வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இக்கருத்தை அவதானிக்கும்போது ஷஆடு நனைகின்றதே என ஓநாய் அழுத’ கதையாகவே இருக்கின்றது.
வடக்கு-கிழக்கு மக்களின்

நல்லாட்சி என்று கூறப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான ஆட்சியை தோற்றுவிப்பதில் வடக்கு-கிழக்கு மக்களே பெரும் பங்காற்றியிருந்தனர்.

அவர்களது நோக்கமெல்லாம் யுத்தத்திற்கு பின்னரான அமைதியான சூழலில் தமக்கு யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு நீதிகிடைப்பதோடு இனநல்லுறவை பேணும் விதத்தில் தமது அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பாகவே இருந்தது.

இதன்காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தின் அனுசரணையோடு ஜெனிவா பிரேரணையும் பல முன்னேற்றகரமான அம்சங்களோடு அமெரிக்கா தலைமையில் சர்வதேச சமூகத்தினால் கொண்டுவரப்பட்டிருந்தது.

ஆனால் அன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் அவரது வெளிநாட்டமைச்சர் மங்கள் சமரவீரவும் அன்று மிக தந்திரமான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமது பிடியில் வைத்து ஜெனிவா பிரேரணை நிறைவேறாது போவதை காலதாமதங்களோடு உறுதி செய்தனர்.
ஷசாத்தான் வேதம் ஓதும் நிலை’

ஆனால் ஜெனிவா மனித உரிமைபேரவை 46-வது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் தறுவாயில் ‘சாத்தான் வேதம் ஓதுவதுபோல’ ரணில் விக்கரமசிங்க தற்போது ஜெனிவா மனித உரிமைபேரவை கூட்டத்தொடர் குறித்து தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

யார் எதைக்கூறினாலும், சர்வதேச சமூகம் ஜெனிவாவில் இலங்கை குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுத்தே தீரும் என்பதற்கு மனித உரிமைகள் காப்பகம் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லட் ஆகியோர் வெயிளிட்ட கருத்துக்கள், அறிக்கைகள் என்பவை நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்க மேலும் கருத்து வெளியிடுகையில் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடவடிக்கையை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாதென்றும் நாட்டு நலனை முன்னிறுத்தியே ஜெனிவா கூட்டத்தொடரை பார்க்கவேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இக்கருத்தை பார்க்கும்போது 2015முதல் 2020வரை ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் ஜெனிவா பிரேரணை குறித்து தனது அனுசரணையை சர்வதேச சமூகத்திற்கு வழங்கியதோடு அதனை நிறைவேற்றும் அரசியல் செல்வாக்கை உள்நாட்டில் கொண்டிருந்தபோதிலும் எதனையும் செய்துவிடாது தற்போது இன்றைய ஆட்சியாளர்களை எச்சரிப்பது அவரது வெகுளித்தனமான, அதேசமயம் கபடத்தனமான கருத்து கண்ணோட்டங்களையே வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.