ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மூலம் ஜனாதிபதியானவர்.
பொருளாதார நெருக்கடியொன்று ஏற்படாவிட்டால், அவர் ஒருபோதுமே ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது.
ஏனெனில் அவர் ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதியாக நோக்கப்பட்டவர்.
ஆனால், தந்திரம் மிக்கவர்.
விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் கூட, ரணிலை நரியென்றும், அவரை விடவும் மகிந்த பரவாயில்லையென்றும் ஒரு முறை கூறியிருந்தார்.
ரணிலின் அரசியலாற்றலும், விடயங்களை தந்திரமாக கையாளுவதில் அவரது திறமையையுமே அவரைக் கண்டு பலரும் அஞ்சுவதற்கு காரணம்.
சிரித்துக்கொண்டே காரியங்களை செய்துமுடித்துவிடும் வல்லமையுள்ளவர்.
பொருளாதார நெருக்கடியால் கதிரையை கைப்பற்றியிருக்கும் அவர், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் கதிரையை
கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடப்போவது தெளிவாகவே தெரிகின்றது.
ரணிலை விட்டால் அடுத்து யாரென்னும் கேள்வியை அரசியல்வாதிகள் தொடக்கம், சாதாரண சிங்கள மக்கள் வரையில் ஏற்படுத்துவதில், அவர் வெற்றிபெற்றிருக்கின்றார்.
இந்த ராஜபக்ஷ குடும்பத்தை பொறுத்தவரையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அவர்களால் நினைத்துப்பார்க்கக்கூட முடியாது.
இந்த நிலையில் ரணிலை ஆதரிப்பதே அவர்களுக்கு முன்னுள்ள தெரிவாக இருக்கின்றது.
இதன் காரணமாகவே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனவிற்கு பிரச்னையில்லை என்றவாறான கருத்துக்கள் முகம் காட்டுகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்னையை தீர்ப்பதற்காக சர்வ கட்சிகளை கூட்டியிருந்தார்.
இந்த சர்வகட்சிக்கான அழைப்பு முற்றிலும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட விருப்பிலிருந்தே முன்னெடுக்கப்பட்டது.
தென்னிலங்கை சிங்கள கட்சிகள் அவ்வாறானதொரு அழைப்பை விடுக்குமாறு ரணிலை கோரவில்லை.
தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வை காணவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட, அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை.
ரணில், ஆரம்பத்தில் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன், பேசவுள்ளதாகவே அறிவித்திருந்தார்.
பின்னர் சடுதியாக தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
இந்த இடைப்பட்ட நாட்களில் இந்திய தரப்பிலிருந்து முக்கிய சந்திப்பொன்றும் ரணில் விக்கிரசிங்கவோடு இடம்பெற்றிருந்தது.
இதன் போது, என்ன விடயங்கள் பேசப்பட்டதென்பதுவெளியில் கசியவில்லை.
இதன் பின்னர்தான் தேசிய இனப்பிரச்னையை தீர்க்கவுள்ளதாகவும் – அடுத்த வருட சுதந்திர தினத்திற்கு முன்னர் அதனை தீர்க்கவுள்ளதாகவும் சடுதியாக அறிவித்தார்.
இது சாத்தியமற்ற விடயமென்பது விவாதிக்கவேண்டியதில்லை.
ஆனால் சில விடயங்களில் முன்னேற்றங்களை காண்பிக்க ரணில் உண்மையிலேயே விரும்பினால் அது இயலாத காரியமென்றும் கூறிவிட முடியாது.
அதாவது, அரசியலமைப்பிலிருக்கின்ற சில விடயங்களை அமுல்படுத்த முயன்றால், அதில் ஒரு சில அடிகளையெடுத்துவைக்க முடியும்.
ரணில் பலமற்றவர் – எனவே அவரால் என்ன செய்துவிட முடியுமென்று சிலர் வாதிடுகின்றனர்.
பாராளுமன்றத்தை பொறுத்தவரையில் அவர் பலவீனமானதொரு ஜனாதிபதிதான்.
ஆனால், ரணிலை விட்டால் வேறு வழியில்லையென்னும் நிலையில்தான் பொதுஜன பெரமுனவினர் இருக்கின்றனர்.
இதுதான் ரணிலின் பலம்.
ஒருவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்தால் கூட, அவரால் இந்தளவு பலமானவராக இருக்க முடியாது.
ஏனெனில் தன்னைவிட்டால் வேறு வழியில்லையென்னும் நிலைமையை தனது திறமையால் ஏற்படுத்தியிருக்கின்றார்.
இன்றைய நிலையில் ரணிலை அகற்றிவிட்டு, நாட்டை பொறுப்பெடுக்கின்றோமென்று கூறுவதற்கு துணிவுள்ளவர்கள் எவருமில்லை. ஆரம்பத்தில் ரணிலின் வரவு தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் அனைவரும் காலப்போக்கில் அமைதியடைந்ததும் இந்த பின்புலத்தில்தான்.
இந்த பின்புலத்தில் நோக்கினால், ரணில் விக்கிரமசிங்க சில பிரச்னைகளை தீர்க்கவேண்டுமென்று, உண்மையிலேயே விரும்பினால், அதற்கான பிள்ளையார் சுழியை இடமுடியும்.