இலஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்பெச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இந்த இருவரும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அனுமதியளித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மற்றும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நிதியமைச்சராகச் செயல்பட்டு, வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான அர்ஜூன் அலோசியஸின் பெயரில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த மொனார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தமையின் மூலம் கையூட்டல் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என ரவி கருணாநாயக்க மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.