எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சர்கள் இருவர் நாளை ரஷ்யா பயணிக்கவுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன
விஜேசேகர தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு குறித்த இருவரும் ரஷ்யா பயணிக்கவுள்ளதோடு, இந்த பயணத்தின் போது எரிபொருள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக இலங்கைக்கு சாதகமான பதிலொன்றை எதிர்பார்ப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
எரிசக்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டில் தற்போது காணப்படும் எரிபொருள் வரிசையை குறைப்பதற்காக இராணுவத்தின் உதவியுடன் நாளை முதல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, டோக்கன் விநியோகிக்கப்படும் போது அவர்களின் கைபேசி இலக்கங்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இதனூடாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைத்ததும் டோக்கன் முறைமையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.