வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு விடுத்த தமிழரசு தலைவருக்கான வேண்கோள்!

0
180

தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்
ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா வலியுறுத்தியுள்ளார்.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடக அறிக்கையில்
தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் முதன்முதல் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவுசெய்வது கடந்தவாரம்
நடைபெற்றுள்ளது. இந்த ஜனநாயகப் பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டுமென அவாவுகிறோம்.
இலங்கை நாட்டின் உள்ளக அரசியல், பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகியன சிக்கல்மிக்கதாகக் காணப்படும் தற்போதைய சூழலில், தமிழரசுக் கட்சியின்
தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றிருக்கும் சிவஞானம் சிறிதரன் எம்.பிக்கு முன்னால் பாரிய கடப்பாடுகள் குவிந்துள்ளன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தமிழ்த் தேசிய அரசியலையும் தமிழ் மக்களையும் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மற்றும் சிங்கள மக்களிடமிருந்து
பிரிக்காதவாறு கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில், தமிழ் தேசிய அரசியல் தலைமைத்துவங்கள் சார்ந்து சந்தேகங்கள் எழாதவாறு உறவுகளை
வெளிப்படைத் தன்மையுடன் பேணவேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.
தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு சிதறிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீளவும் பலப்படுத்த வேண்டும்.
ஆபிரிக்க தேசிய காங்கிரசில் காணப்பட்ட கூட்டுப் பலமே தென்னாபிரிக்க மக்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. இந்த உண்மையை தமிழ் அரசியல்
கட்சிகள் ஏற்றாக வேண்டும்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையான, ‘ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு’ என்பதை தமது இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.