வனப்பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிக்க தடை

0
170

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வன ஜீவராசிகள் மற்றும் வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த பகுதிகளில் மலையேறுவதற்கும் அங்கு முகாமிடுவதற்கும் நேற்று முதல் தடை விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலை கிறேட் வெஸ்டன் வனப்பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வன பகுதியை பார்வையிட விரும்பினால் விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகளின் அனுமதி பெறப்படவேண்டும்.

அவ்வாறு பெறப்படுகின்ற அனுமதி காவல்துறையினருக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பயணத்தின் நிறைவிலும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.