வவுனியா – புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் அரசாங்க அதிபரின் உத்தரவுகளை மீறி, பரல்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் இந் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும் பொதுமக்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க அதிபரின் கலந்துரையாடலில் பரல்களில் பெற்றோல் விநியோகம் செய்வதில்லை. குதங்களில் சேமித்து வைப்பதை தவிர்த்து வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எனினும் நேற்றையதினம் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் முடிந்துள்ளதாக தெரிவித்துவிட்டு, தனியார் நிறுவனங்கள் சிலவற்றிற்கு பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இச் சம்பவத்தை முறைப்பாடாக சில பொதுமக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபனிடம் கேட்டபோது. இவ்வாறான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்க அதிபரின் தீர்மானங்களை மீறி இடம்பெற்ற இச்சம்பவத்தால் அங்குள்ள பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் சேமித்து வைத்து விநியோகம் செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும். இது குறித்து அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள வவுனியா வடக்கு வலய கல்விப்பணிமனை உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.