வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச்சென்ற இருவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளது.

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் காணி ஒன்றில் கட்டி நின்ற மாட்டினை திருடிச்சென்ற இருவரை தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்த இளைஞர்கள் அவர்களை கட்டிவைத்து நையப்புடைத்ததுடன் வவுனியா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.இதன்போது குறித்த இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர். இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்றுநேரம் முரண்பாடான நிலை ஏற்பட்டது.

எனினும் குறித்த இருவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் பொதுமக்களிடம் உறுதியளித்த நிலையில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பாக பொதுமக்களால் தொடர்ச்சியான முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது