வெற்றிக்கான விளையாட்டுத்துறை மூலோபாய திட்டத்தை தயாரிக்கும் பணியில் இலங்கை ஒலிம்பிக் குழு

0
102

விளையாட்டுத்துறையில் வெற்றிகளை  ஈட்டும் நோக்கில் இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு ஒரு மூலோபாய திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தின்லோசான் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை விஞ்ஞான பிரிவின் விளையாட்டுத்துறை முகாமைத்துவ பேராசிரியர் இம்மானுவேல் பெய்ல், பேராசிரியர் பி.எல்.எச். பெரேரா மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் உயர் அதிகாரிகள் ஆகியோரின் தீவிரமான மேற்பார்வையில் இந்தத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படவுள்ளது.

மூலோபாயத் திட்டம் ஒரு புறமிருக்க,4 வருடங்களுக்கு ஒருமுறை ஆற்றல் வெளிப்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படும். மூலோபாய திட்டக் குழுவினரும் தேசிய ஒலிம்பிக் குழுவினரும் தங்களது திட்டமிடல் செயல்முறையின் போது பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளனர்.

தேசிய ஒலிம்பிக் குழு 1937இல் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இந்த சவால் மிக்க பணி குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இது தொடர்பாக ஒலிம்பிக் இல்ல ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர்கூடத்தில் அண்மையில்நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது விளக்கம் அளித்த தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா, “தேசிய ஒலிம்பிக் குழு 1937இலிருந்து இயங்கி வருகிறது. கடந்த 86 வருடங்களில் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்களே கிடைத்துள்ளன. கடந்த கால நிகழ்வுகளை எங்களால் மாற்ற முடியாது. ஆனால், ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மாற்ற முடியும். எனவே, அனைவரையும் ஒன்றிணைப்பது மற்றும்  வேற்றுமையில் ஒற்றுமை என்பன புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நினைத்தோம். நாங்கள் தயாரிக்கும் இந்த மூலோபாய திட்டம் உங்களுக்கானது. உங்கள் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு இது உதவும். இதன் மூலம் நீங்கள் எவ்வாறு சிறந்த பெறுபேறுகளை ஈட்டுகிறீர்கள், நாட்டில் எவ்வாறு விளையாட்டுத்துறை முன்னோக்கி நகர்கிறது என்பதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.

இந்த திட்டமிடலின்போது,33 அங்கத்துவ சம்மேளனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியன குறித்து தேசிய ஒலிம்பிக் குழு மிகவும் விரிவாக கவனம் செலுத்தியது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் பேராசிரியர் இம்மானுவேல் பாய்ல், மூலோபாயத் திட்டமிடல் குறித்து விளக்கினார்.

“இலங்கைக்கு, குறிப்பாக விளையாட்டுத்துறை சம்மேளனங்களுக்கும் தேசிய ஒலிம்பிக் குழுவுக்கும் ஒரு மூலோபாயத் திட்டம் மிகவும் அவசியமாகும். வலுவான மற்றும் ஒருங்கிணைந்த தேசிய விளையாட்டு அமைப்பு மற்றும் தேசிய விளையாட்டுக் கொள்கை என்பன இதில் கவனம் செலுத்தப்படும். ஏனெனில், தனித்தனியே தேசிய ஒலிம்பிக் குழுவும் தேசிய விளையாட்டுத்துறை சம்மேளனங்களும் இயங்கும்போது அதனால் வெறுமைதான் மிஞ்சும். உண்மையில் நாங்கள் ஒரு உறுதியான பங்காளித்துவத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. எனவே, தேசிய ஒலிம்பிக் குழு மற்றும் விளையாட்டுத்துறை சம்மேளனங்களுக்கான மூலோபாய திட்டத்தை உருவாக்குவது மிகவும் முக்கியமானது”என பேராசிரியர் இம்மானுவேல் பாய்ல் குறிப்பிட்டார்.

முகாமைத்துவக் குழுத் தலைவர் பேராசிரியர் பி.எல்.எச். பெரேராவும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

இதேவேளை, பேராசிரியர் இம்மானுவேல் பாய்லுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக கலந்துரையாடல் ஒன்றின்போது தெரிவுசெய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள்  மூலோபாய திட்டத்திற்கான சில யோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ரீ. பி. ரஹமான் (சண்டே ஒப்சேர்வர்), நெவில் அன்தனி (வீரகேசரி), நௌஷாத் அமித் (சண்டே டைம்ஸ்), ஹரித்த பெரேரா (சுயாதீன விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்), சத்துக்க (ஐரிஎன்) ஆகியோர் பங்குபற்றி தங்களது யோசனைகளை முன்வைத்தனர். – (என்.வீ.ஏ.)