சமீபத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘ஷான் சுத்தா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரர், சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி வெல்லவாய நகரத்திற்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது, வெள்ளவாய பிரதேசத்தின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான மஹவெலமுல்லே ஷான் சுத்தா என்று அழைக்கப்படும் சம்பத் குமார என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அப்போது, சந்தேக நபர் பொலிஸாரை கூரிய ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தி தாக்க முயன்றார். இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர், இன்று (03) காலை சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.