
இந்தியாவின் புதிய சகாப்தத்தை நோக்கிய முதல் முயற்சி ஹராரேயில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஸிம்பாபப்வேயுடனான தோல்வியுடன் ஆரம்பித்தது.ஆனால், அதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா 100 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 1 – 1 என சமப்படுத்தியது.
இந்தியாவின் எதிர்கால வீரர் என நம்பப்படும் அபிஷேக் ஷர்மா அபார சதம் குவித்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினார்.இந்த வருட ஐபிஎல் போட்டியில் அசத்திய அபிஷேக் ஷர்மா, ருத்துராஜ் கய்க்வாட், ரின்கு சிங் ஆகிய மூவரும் இணைந்து 220 ஓட்டங்களுக்கு மேல் குவித்தனர்.அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் ஷுப்மான் கில் (2) இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழக்க இந்தியா சிறு தடுமாற்றம் அடைந்தது. ஆனால், அபிஷேக் ஷர்மா தனது 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி கன்னிச் சதம் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் ருத்துராஜ் கய்க்வாடுடன் 137 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
7 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 7 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 100 ஓட்டங்களைக் குவித்தார்.
தொடர்ந்து ருத்துராஜ் கயக்வாட், ரின்கு சிங் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் மேலும் 87 ஓட்டங்ளைப் பகிர்ந்தனர்.
ருத்துராஜ் கய்க்வாட் 47 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 77 ஓட்டங்களுடனும் ரின்கு சிங் 22 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 48 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
ஸிம்பாப்வே துடுப்பாட்டத்தில் வெஸ்லி மதேவியர் (43), ப்றயன் பெனெட் (26), ஜொநதன் ராஸா (10), பின்வரிசை வீரர் லூக் ஜொங்வே (33) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஆவேஷ் கான் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் முக்கேஷ் குமார் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவி பிஷோனி 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.