ஒரே நேரத்தில் தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின், நடிகர் விஜய் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் மாநில பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பில் , எதிர்முனையில் பேசிய நபர் ‘முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ எனக் கூறி இணைப்பை துண்டித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை பொலிஸார் உடனடியாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தேனாம்பேட்டை பொலிஸார் , வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் வீதியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் வீட்டு வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்து பார்த்தனர்.
பலமணி நேர சோதனைக்கு பின்னர் சந்தேகப்படும்படி எந்த பொருள்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை தனிப்படை அமைத்து பொலிஸார் தேடி வருகின்றனர்.
இதேபோல், நேற்று காலை பொலிஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்து தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.
இதையடுத்து, நீலாங்கரை பொலிஸார் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கும் சந்தேகப்படும்படி எந்த வெடிபொருள்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த மிரட்டலும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.