சீன மக்கள் விடுதலை இயக்கத்தின் இராணுவ கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இராஜதந்திர ரீதியில் இராஜதந்திர ரீதியில் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது எனினும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் அதன் வருகை தாமதமானது. இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எவ்வாறாயினும், குறித்த கப்பல் சீனாவிலிருந்து, பயணத்தை ஆரம்பித்து 24 நாட்களின் பின்னரே, அதாவது இலங்கையை வந்தடைவதற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி வரவிருந்த குறித்த கப்பலின் வருகை தாமதமானது. சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கடந்த 13 ஆம் திகதி அனுமதி வழங்கியது. தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக கப்பல் நாட்டிற்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாக கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது. சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தது. இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா கொண்டிருக்கின்றது. இந்தக் கப்பலானது, சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டப்பட்டு 2007 செப்டெம்பரில் சேவையில் இணைக்கப்பட்டது. இந்தவகைக் கப்பல்களை செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுதல், தகவல்தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கப் பயன்படுத்துகிறது. இறுதியாக, ‘யுவான் வாங் 5’ கப்பலானது, சீனாவின் ‘லாங் மார்ச் 5பி’ ஏவுகணை விண்வெளிக்கு ஏவப்பட்டபோது ஆய்வகத்தொகுதி மற்றும் கடற்பரப்பினைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. சீனாவின் ஆய்;வுக் கப்பல் இன்று அம்பாந்தோட்டையை வந்தடைந்த நிலையில், கப்பலை வரவேற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, விமல் வீரவங்ச, அத்துரலிய ரத்ன தேரர், வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பங்கேற்றதுடன்,இலங்கைக்கான சீனத் தூதுவர் உட்பட சீன உயர் அதிகரிகள் பலரும் கலந்துகொண்டனர். கப்பலின் கப்டன் உள்ளிட்ட அதிகாரிகள் கண்டிய நடனத்தோடு வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.