100 பாடசாலைகளில் ‘மூலதன சந்தைக் கழகங்கள்’ நிறுவும் வேலைத்திட்டம் கண்டியில் ஆரம்பமானது.

0
144
பாடசாலை மாணவர்களின் நிதி அறிவை அதிகரிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் ‘மூலதன சந்தைக் கழகங்கள்’ நிறுவும் நிகழ்ச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கண்டி நுகவெல மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று ஆரம்பமானது.ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அடுத்த வருடம் முதல் இலங்கை மத்திய வங்கியின் பூரண அனுசரணையுடன் பாடசாலைகளில் வருடாந்த மத்திய வங்கி அறிக்கைகள் கலந்துரையாடும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் எனவும் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டுள்ளார்.நாடு முழுவதிலும் நிறுவப்படும் முதல் 100 மூலதன சந்தைக் கழகங்களில், அதிகூடிய செயற்திறனைக் கொண்ட பாடசாலைக்கு பரிசுகள் வழங்கப்படுமெனவும், அந்தக் கழகத்தைச் சேர்ந்த பத்து மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்களுக்கு சிங்கப்பூர் சென்று அந்நாட்டின் பங்குச் சந்தை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .முதல் 100 மூலதன சந்தைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மேலதிகமாக, இந்த வருடம் நாடளாவிய ரீதியில் மேலும் 200-300 பாடசாலைகளுக்கு மூலதன சந்தைக் கழக ஸ்தாபன வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.