தெற்காசியாவில் முதன்முறையாக சிறுவர் நேய நகராக பிரகடனப்படுத்தப்பட்டு சிறுவர்களை முதன்மைப்படுத்தியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளை அறிந்துகொள்வதற்காக இலங்கையின் உள்ளுராட்சிமன்றங்களில் பெண் உறுப்பினர்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் செரி நிறுவனம் இணைந்து மட்;டக்களப்பு மாநகரத்தினை மனித நேய மாநகராக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் சிறுவர்கள் மகிழ்ச்சியாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகள் இன்று தேசியத்தினையும் தாண்டியதாக பேசப்படும் நிலையில் அது தொடர்பில் அறிந்துகொள்வதற்கான பல்வேறு குழுக்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதன் கீழ் இலங்கையில் உள்ள 25மாவட்டங்களிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100பெண் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.
பவ்ரல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியுடன் இந்த மட்டக்களப்பு மாநகரசபையின் சிறுவர் நேய திட்டம் பற்றிய அறிவூட்டல் நிகழ்ச்சியின் அடிப்படையில் இவர்கள் அழைத்துவரப்பட்டனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,செரி நிறுவனத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் ஜெ.தர்சன் ஆகியோர் வரவேற்று தமது செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.இந் நிகழ்வில் பெவ்ரல் நிறுவனத்தின் இணைப்பாளர் பிரசன்னியா உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.