பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், தீவிர சிங்கள இனவாதத்தின் முகமாகவும் இருக்கின்ற உதய கம்மன்பில, 13ஆவது திருத்தச் சட்டத்திலிருக்கும் காவல்துறை அதிகாரத்தை நீக்குவதற்காக 22ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில், ஒரு தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்திருக்கின்றார்.
அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமா – எடுத்துக்கொள்ளப் பட்டாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுமா என்பதெல்லாம் கேள்விகளாக இருந்தாலும்கூட, இப்போதும் அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை ஒரு பேசுபொரு ளாக்கும் நிலையில்தான் தென்னிலங்கை இருக்கின்றது என்பதைத்தான் தமிழர் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
13ஆவது திருத்தத்தில் ஒன்றுமில்லை, அதனை ஓர் ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாதென்று தமிழ்த் தேசியர்கள் என்போர் கூறிக்கொண்டிருக்கும்போது, மறுபுறம், 13ஆவது திருத்தத்திலுள்ள காவல்துறை அதிகாரத்தால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, தனிநபர் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாகக் கூறியிருக்கும் நிலையில்தான் உதய கம்மன்பில இவ்வாறானதொரு பிரேரணையை கொண்டுவந்திருக்கின்றார்.
13ஆவது திருத்தத்தை எதிர்க்கும் சிங்கள தரப்புகளோ அது தமிழர்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்குகின்றது என்றவாறான அச்சங்களை வெளியிடுகின்றனர் – ஆனால், மறுபுறமோ, தமிழ் அரசியல் சமூகத்திலுள்ள ஒரு தரப்பினரோ 13ஆவது திருத்தத்தை தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றனர் –
ஆனால், அவ்வாறு கூறுபவர்களுக்கோ எவ்வாறு தாண்டிச் செல்வது என்று கூறத் தெரியவில்லை.
இந்த அடிப்படையில்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கை அரசியலில் அனைவரும் உச்சரிக்கும் ஒரு விடயமாக இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில்தான் வீழ்ந்து கிடக்கும் சிங்கள இனவாத அரசியலுக்கு புத்துணர்சியூட்டும் ஒரு துருப்புச்சீட்டாக காவல்துறை அதிகாரத்தை கம்மன்பில அணியினர் கையிலெடுத்திருக்கின்றனர்.
நாட்டை பாதுகாக்கும் அனைவரும் ஓரணியில் வாருங்கள் – இதனை எதிர்ப்பதற்காக அணிதிரளுங்கள் என்றும் அவர்கள் அறிவிக்கலாம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி கேள்வி எழுகின்றது – தமிழ் மக்கள் வழமைபோல் தென்னிலங்கை வாக்காளர்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லாமல் வாக்களிக்கப் போகின்றனரா – தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை எவ்வாறு வழிநடத்தப் போகின்றன?
அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை, அது கொண்டுவரப்பட்டபோது இருந்தவாறு நடைமுறைப்படுத்தும் வாக்குறுதியை தருபவர்களுக்கு – குறிப்பாக அதனை தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்ப்பவர்களுக்கே நாங்கள் வாக்களிப்போம் – இல்லாவிட்டால் தமிழ் மக்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கே வாக்களிப்பர் – என்றவாறான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
இது ஒன்றுதான் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள தெரிவாக இருக்க முடியும்.
இவ்வாறானதொரு தீர்மானத்தின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்டக்கூடிய ஆளுமையுடன் தமிழ் கட்சிகள் இருக்கின்றனவா?