சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்கும் முயற்சியின்போது இறந்த இரண்டு நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீ நகரத்தை அழித்த எரிமலைச் சீற்றத்தில் இறந்த இருவரின் உடல்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம்தேடி இருக்கலாம். அப்போது எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என பாம்பீ தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா கூறினார்.
கி.பி. 79இல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் பாம்பீ நகரம் முற்றாக மூழ்கியது. இந்த எரிமலைச் சீற்றம் பாம்பீ நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் சாம்பலில் புதைத்துவிட்டது.
தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம் ஆய்வு செய்ய ஒரு வளமான ஆதாரமாக மாறியிருக்கிறது.
பண்டைய பாம்பீ நகரத்தின் புறநகரில் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்தபோது இந்த இரண்டு நபர்களின் எலும்பு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர்.
புதைந்துபோன அந்தநபரின் வயது 30-40 இற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கழுத்துக்கு கீழே கம்பளி ஆடையின் தடயங்கள் காணப்பட்டன. மற்றொரு நபரின் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் அதிகாரிகள் தெரிவித்தனர்.