2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என உலக உணவுக் கழகத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் என்ற அமைப்புக்கு கடந்த மாதம் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு, உலகம் முழுவதும் வறுமையில் வாடும் நபர்களுக்கு 52 ஆண்டுகளாக உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2020-ம் ஆண்டைவிட 2021-ம் ஆண்டு மோசமானதாக இருக்கும் என உலக உணவுக் கழகத்தின் தலைவர் டேவிட் பேஸ்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து அசோசியேட்டட் ப்ரஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐ.நா அமைப்புக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டை விட, அடுத்த ஆண்டு (2021) மோசமானதாக இருக்கும். 2021ம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்படும். அதனைச் சமாளிக்க பில்லியன் கணக்கான டாலர் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உலக நாடுகளின் தலைவர்கள் பொருளாதார உதவி மற்றும் பிற உதவிகள் செய்ததன் காரணமாக நம்மால் 2020ம் ஆண்டில் பஞ்சத்தை ஓரளவிற்கு தவிர்க்க முடிந்தது.
பல நாட்டின் உலக தலைவர்களை நேரில் சந்தித்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆய்வின்படி, அடுத்த சில மாதங்களில் ஏமன், தெற்கு சூடான், வடகிழக்கு நைஜீரியா மற்றும் புர்கினா பாசோ உள்ளிட்ட 20 நாடுகள் அதிக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்குள்ளான சாத்தியங்களை எதிர்கொள்ளக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.