2022 மண்முனை வடக்கு பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் உதைபந்தாட்டத்திற்கான இறுதி போட்டி நேற்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்த ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டுத்துறை உத்தியயோகத்தர் எ.சிவகுமார் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் நடாத்தப்பட்ட 2022 ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டு விழாவின் பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட 23 பிரதேச உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
கிராம மட்டத்தில் வளர்ந்து வருகின்ற உதைப்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக மண்முனை வடக்கு பிரதேச மட்ட உதைபந்தாட்ட கழக 23 அணிகளுக்கிடையில் தெரிவு போட்டியாக நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு ரெட்ணம் கழக அணியும் மட்டக்களப்பு லயிட் ஹவுஸ் கழக அணியும் மோதிக்கொண்டன.
இதன்போது இரண்டு அணிகளும் இரண்டுக்கு இரண்டு (2-2) கோள்களை பெற்று சமநிலை அடைந்த நிலையில் நேரம் முடிந்ததன் காரணமாக வெற்றியை தீர்மானிப்பதற்கு இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட மேலதிக தண்டனை உதை மூலம் மட்டக்களப்பு ரெட்ணம் உதைபந்தாட்ட கழக அணி வெற்றியீட்டியது.