2023 ஜனவரியிலும், ஜூனிலுமாக இரு கட்டங்களாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையின் தற்போதைய இழப்பை ஈடுகட்ட மின்சார கட்டணம் சுமார் 70வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என பொருளாதார உறுதித்தன்மைக்கான தேசிய பேரவை துணைக்குழுவிடம் மின்சார சபையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட அதுபோதாது. எனவே, தற்போது மின்சார கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகரித்த மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என அவர் தேசிய பேரவை உப குழுவுக்கு மேலும் அறிவித்துள்ளார். இதேவேளை, மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை பரிசீலிக்கவில்லை என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.