2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையில், உயர் செயல்திறன் கொண்ட குழுவிற்கான 58 வீரர்களைக் கொண்ட அணியை விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பரிந்துரைத்துள்ளார்.
பரிஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரையிலும், பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரையிலும் பிரான்ஸின் பரிஸில் நடைபெறவுள்ளன.
பரிஸ் ஒலிம்பிக்கில், 11 வெவ்வேறு விளையாட்டுத் துறைகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 33 வீரர்கள் தயாராகி வருவதாகவும், அதேபோன்று பரா ஒலிம்பிக்கில் 8 வெவ்வேறு விளையாட்டுத் துறைகளில் பங்கேற்பதற்காக மொத்தம் 25 வீர வீராங்கனைகள் தயாராகி வருவதாகவும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஷேமல் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.
பரா ஒலிம்பிக் வரலாற்றில், இலங்கை ஒரு தங்கப் பதக்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளது.
2020 இல் தினேஷ் பிரியந்த தங்கப் பதக்கத்தையும், 2016 இல் வெண்கலப் பதக்கத்தையும், பிரதீப் சஞ்சய 2012 இல் வெண்கலப் பதக்கத்தையும், துலான் கொடிதுவாக்கு 2020 இல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.