கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1900ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (ஆண்கள், பெண்கள்) 6 அணிகள் பங்கேற்கும் என்று இன்று போட்டி அமைப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம் 90 வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் அனுமதி வழங்கப்படும். அதேபோல பெண்கள் பிரிவிலும் இவ்வாறே செயற்படுத்தப்படும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாகும்.94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்கள் ஆகும். தகுதி சுற்று மூலம் 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.