22வது உலக கோப்பை காற்பந்து : முதல் போட்டியில் ஈகுவடோர் அணி வெற்றி

0
165

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடர் நேற்று ஆரம்பமான நிலையில், முதல் போட்டியில் ஈகுவடார் அணி வெற்றிபெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகியது. தொடக்க நாளான நேற்று ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் வரவேற்பு நாடான கட்டார் அணியும் ஈகுவடார் அணியும் மோதின. இதில் ஆரம்பம் முதலே அதிரடி தாக்குதலை தொடுத்த ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது. அந்த அணிக்கு ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை என்னர் வலென்சியா கோலாக்கினார். இதனால் ஈகுவடார் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இதையடுத்து 31 வது நிமிடத்தில் வலென்சியா மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டன. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் கோல அடிக்க இயலவில்லை. இதனால் இரண்டாம் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இறுதியில் ஈகுவடார் அணி முதல் பாதியில் அடித்த இரண்டு கோல்களின் அடிப்படையில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் முதல் வெற்றியை ஈகுவடார் அணி பதிவு செய்துள்ளது. இதேவேளை கட்டார் நேர அடிப்படையில் இன்று மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து ஈரான் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் இரவு 09.30 மணிக்கு நெதர்லாந்து செனகல் அணிகள் போட்டியிடுகின்றன. மூன்றாவது போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன் இதில் அமெரிக்கா வேல்ஸ் அணிகள் மோதவுள்ளன.