383 வகையான அத்தியாவசிய மருந்துகளில் 90 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது மருந்துகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பெருமளவிலான மருத்துவர்கள் இருதய நோயாளர்களை பாதுகாப்பதற்காக டொசிமைன் என்ற தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோன்று குறை குறுதிக்கான அழுத்தத்துக்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றுக்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
மிக முக்கியமான 14 மருந்துகள் தற்போது கையிருப்பில் உள்ளன.
அன்டிபயோட்டிக் மருந்துகள் குறைவாக இருந்த நிலையில் அவற்றையும் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்.
எனவே மிக முக்கியமான 14 வகை மருந்துகளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை.
அடுத்தடுத்த வாரங்களில் இந்த நிலைமைகளை சரிசெய்ய முடியும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.
இந்திய கடனுதவி திட்டத்தின் மூலம் இவற்றை ஓரளவு சரி செய்ய முடியும்.
383 அத்தியாவசிய மருந்து உள்ளன. அவற்றில் 90 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
மருந்து தட்டுப்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் நாம் இல்லை. மருந்து தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அடுத்தடுத்த வாரங்களில் மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவைப்படும் முழுமையான மருந்துகளின் அளவுகளை அதாவது ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துகளின் அளவுகளை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதில் பல சவால்கள் உள்ளன. இல்லை என்று இல்லை. சவால்களுக்கு மத்தியிலேயே மருத்துவ சேவையை திறம்பட முன்னெடுத்து வருகின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.