ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டு 76 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கின்றது.
இதனை மகிழ்ச்சியுடன் நினைவுகூரக் கூடிய நிலையில் இப்போது ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. காரணம் 2020 தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதலபாதாளத்துக்கு சென்றிருந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் எட்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நிகழ்வில் பங்கு கொண்டிருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரைப் பொறுத்தவரையில் இது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு.
ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படையில் ஒரு தீவிர வலதுசாரி அரசியல் கட்சியாகும்.
டொன் ஸ்டீபன் சேனநாயக்கவால் 1946இல் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும் கடந்த 75 வருடங்களில் 38 வருடங்களை ஆட்சி செய்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க 1951இல் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்க ஒரு சிங்கள – பௌத்த தேசியவாத கட்சியாக முன்னிறுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல் நகர்வுகளும் அதன் விளைவுகளும்தான், இலங்கையின் இதுவரைகால அரசியலாக இருக்கின்றது. ராஜபக்ஷக்கள் கடந்த தேர்தல்களில் தனியான கட்சியில் வெற்றிபெற்றிருந்தாலும்கூட சிறீ லங்கா சுதந்திரக் கட்சிதான் அவர்களின் தாய் கட்சியாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படையில் வலதுசாரி அரசியலைப் பிரிதி நிதித்துவப்படுத்தினாலும் முற்றிலும் மேற்கு சார்பான வெளிவிவகாரக் கொள்கையை கொண்டிருந்தாலும்கூட தேசிய இனப்பிரச்னையைக் கையாளுவதில் தாராளவாத அணுகுமுறையை கடைப்பிடித்திருக்க வில்லை.
பண்டா – செல்வா உடன்பாடு, எவ்வாறு சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பண்டாரநாயக்கவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதோ, அதேபோன்றுதான் டட்லி – செல்வா உடன்பாடு ஐக்கிய தேசியக் கட்சியின் டட்லியால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது.
தங்களுக்குள் அதிகாரத்தில் கொள்கையில் மோதிக்கொண்டாலும்கூட தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை துஷ்பிரயோகம் செய்ததில் இரண்டு பாரம்பரிய கட்சிகளுக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடுகளை காணமுடியாது.
ஒப்பீட்டு அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக உச்சமான துஷ்பிரயோகங்களும் அழித்தொழிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன.
நன்கு படித்த தந்திரசாலியான மேற்குலக – குறிப்பாக அமெரிக்க சார்பானவரான ஜே. ஆர். ஜெயவர்த்தன அதிகாரத்தில் இருந்தபோதுதான், 1983இல் தமிழ் மக்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான அழித்தொழிப்புக்கள் அரங்கேறின.
ஈழத் தமிழர்களின் அறிவின் அடையாளமாகப் போற்றப்பட்ட, யாழ்ப்பாண நூல் நிலையம் எரித்து சாம்பலாக்கப்பட்டது.
இவைகள் அனைத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அசிங்க நடத்தைகளாகும்.
ஆனாலும் இதிலுள்ள முரண்பாடான விடயம், இத்தனை மோசமான அனுபவங்களுக்குப் பின்னரும்கூட தமிழ்த் தேசிய தலைமைகள் ஜனாதிபதி தேர்தல்களின்போதும், பேச்சுகளின்போதும் ஐக்கிய தேசியக்
கட்சியுடன்தான் இணைந்து பயணித்திருக்கின்றன.
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்களின்போதும் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்டபாளர்களையே ஆதரித்திருக்கின்றனர்.
2005 தேர்தல் மட்டும் சற்று விதிவிலக்கானது. ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் நோக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தலை பகிஷ்கரிக்குமாறு வலியுறுத்தியது.
இன்று மீளவும் 17 வருடங்களுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அன்று கைநழுவிப்போன இடத்தைப் பிடித்திருக்கின்றார்.
இந்த நிலையில் அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றுக்கு மாறாக அவர் என்ன செய்வார் – எதைச் செய்ய முயற்சிப்பார் என்பதில்தான் அவருக்கும் அவரின் ஐக்கிய தேசியக் கட்சி ஆசான்களுக்குமுள்ள வேறுபாடு நிரூபணமாகும்.