யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டடம் அமைப்பதற்கு,
அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடிகாமம் வடக்குப் பகுதியில், மக்கள் வாழும் பகுதியில் கடந்த 10 வருடங்களாக கள்ளுத் தவறணை இயங்கி வருகிறது.
ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்த தவறணை 10 ஆண்டுகளாக அகற்றப்படாமல் காணப்படுகின்றது.
இந்நிலையில், கள்ளுத்தவறணையை புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டம் ஆரம்பிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
எதிர்ப்பு நடவடிக்கையின் போது பெண்கள் அதிகளவில் ஒன்றுகூடி, எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையால் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிர்வீரசிங்க, போராட்டக்காரர்களின் நியாயப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி, கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு அறிவித்தார்.
அத்தோடு நாளைய தினம் சாவகச்சேரி நீதிமன்றின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்று, மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையினைக் கைவிட்டனர்.
கள்ளுத்தவறணை அந்தப் பகுதியில் காணப்படுவதால், வீதிகளால் மாணவர்கள், பெண்கள் செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாகவும்
போராட்டக்காரர்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.