மட்டு.நாவற்குடா பொதுச்சந்தை கட்டடத்
தொகுதிக்கான அடிக்கல் நடல்

0
153

உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள நாவற்குடா பொது சந்தை கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர மாநகர ஆணையாளர் நாகராஜா மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மாநகர சபையின் உறுப்பினர்களான ம.நிஸ்கானந்தராஜா, த.இராஜேந்திரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கட்டிட தொகுதி விற்பனை கடைகள், கலாசார மண்டபம் என்பனவற்றினை உள்ளடக்கிய வகையில் இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் ஆரம்ப கட்ட பணிகள் உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிச் செயற்திட்டத்தின் பங்களிப்புடன் 31 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த அடிக்கல் நடும் நிகழ்வில் நாவற்குடா கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாக சபையின் உறுப்பினர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.

மட்டக்களப்பு நகரை அண்டிய நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் பிரதேசங்களை வர்த்தக ரீதியாக முன்னேற்றும் நோக்கிலும் அப்பிரதேசங்களை அண்டிய உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் குறித்த சந்தை தொகுதி அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.