கூட்டமைப்பின் அடுத்த தலைமை?

0
417

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தொடர்பில் எதிர்காலம் சிக்கலானதாக இருக்கப் போகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போதே தெளிவாகத் தெரிகின்றன. தற்போது தலைவராக இருக்கின்ற சம்பந்தன் பெயரளவிலேயே தலைவராக இருக்கின்றார். நோய்வாய்ப்பட்டிருக்கின்ற காரணத்தால் அவரால் திறம்பட செயல்பட முடியாது. அவரின் சொந்தத் தொகுதியான திருகோணமலை மாவட்டத்துக்கு கடந்த ஒன்றரை வரு டங்களாக சம்பந்தன் செல்லவில்லை. திருகோணமலை மாவட்ட அபி
விருத்திக் குழுக் கூட்டத்தில், தமிழ் பிரதிநித்துவம் இல்லாமலேயே முடிவுகள்
எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், அவர் வசமுள்ள பாராளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பை பங்காளிக் கட்சிகளின் தலைவர் ஒருவரிடம் ஒப் படைக்க வேண்டுமென்னும் அபிப்பிராயங்கள் சிவில் சமூக பரப்பில் இருக் கின்றன.
இவ்வாறானதொரு சூழலில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன், சம்பந்தனுக்கு பின்னர் கூட்டமைப்பின் தலைமை சுழற்சி முறையில் இடம்பெற வேண்டுமென்றும், தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டும் இருக்க முடியாதென்றும் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தனுக்குப் பின்னர் கூட் டமைப்பின் நிலைமை சிக்கலடையும் என்பதையே அவரின் கூற்று எடுத் துரைக்கின்றது. கூட்டமைப்பிற்குள் நீண்டகாலமாக கட்சி மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது. எனினும், பங்காளிக் கட்சிகளின் விட்டுக் கொடுப்புக் களின் காரணமாக கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒரு தேர்தல் கூட்டாக நீடிக் கின்றது.
கூட்டமைப்பை தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்க முடியுமா? இந்தக் கேள்வி பலரிடம் உண்டு. சம்பந்தனுக்கு பின்னர் கூட்டமைப்பை, கூட்ட மைப்பாக தொடர்வது பிரச்னைக்குரிய ஒன்றாகவே இருக்கும். கூட்டமைப் பைப் பாதுகாக்க வேண்டுமாயின் சில விடயங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும். அதாவது, சம்பந்தன், அவர் வசமுள்ள பாராளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பை, பங்காளிக் கட்சியின் தலைவர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். பங்காளிக் கட்சிகளின் தலைவர் ஒருவர் பாராளுமன்ற குழுத் தலைவரானால், கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பயணிக்க முடியுமென்னும் நம்பிக்கை பங்காளிக் கட்சிகள் மத்தியில் பலமடையும். சம்பந்தனுக்கு பின்னரும் கூட்டமைப்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்னும் உந்து தலும் கரிசனையும் அவர்களுக்குள் ஏற்படும்.
ஏனெனில், கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை தங்களிடம் வழங்கு மாறு, ரெலோ தலைவர், செல்வம் அடைக்கலநாதன் கோரிய போதிலும், அது வழங்கப்படவில்லை. சுமந்திரனே தொடர்ந்தும் பேச்சாளராக இருக் கின்றார். சுமந்திரன் தொடர்பில் பங்காளிக் கட்சிகள் மத்தியில் எதிர்மறை யான கருத்துக்கள் இருக்கின்றன என்பது இரகசியமான ஒன்றல்ல. ஒற்றுமையென்பது வாயால் கூறுகின்ற விடயமல்ல. ஏனைய கட்சிகளுக்கு சமதையான கௌரவம் இருக்கின்றபோதுதான், ஓர் அரசியல் கூட்டு
நிலைக்க முடியும்.
மலையகக் கட்சிகள், தங்களுக்குள் ஒன்றுபட்டு, வெற்றிகரமாக ஒரு கூட்டை ஏற்படுத்தியிருக்கின்றன. அவர்களால் முடிந்த ஒரு விடயம் ஏன் கூட்டமைப்பினால் முடியவில்லை? ஆரம்பத்திலிருந்தே கூட்டமைப்பை தனித்துவமான ஓர் அரசியல் ஸ்தாபனமாக முன்கொண்டு செல்வதற்கு தமிழ் அரசுக் கட்சியே தடையாக இருந்தது. இது தொடர்பில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கின்றோம். ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர் என்போரிடமுள்ள தலைமைத்துவ பலவீனத்தின் காரணமாக, அவர்கள் எதனையும் பொருட்படுத்தவில்லை. தலைவர்
கள் என்போர் அதிகம் கேட்பதற்கும் கிரகிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்த் தேசிய பரப்பில் இந்தப் பண்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால், தங்களுடைய அரசியல் தலைமைத்து வத்தை ஒற்றுமையுடன் உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதாயின், அவ் வாறான கட்சிகள் மக்களை பிரதிநித்துவம் செய்யும் தகுதிக்கு உரிமை கோர முடியாது.