வடக்கு மாகாணத்தில் புதிதாக இரண்டு மாநகர சபைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ள அதேவேளை நாடளாவிய ரீதியில் 7 நகர சபைகள் மாநகர சபைகளாக மாற்றம் செய்யப்படவுள்ளது. செயற்பாட்டில் இருக்கும் 7 நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றவும் 3 பிரதேசசபைகளை நகர சபைகளாக மாற்றுவது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் , மக்களின் தேவைப்பாடுகள் அதிகரிப்பு என்பவற்றை ஆராய்ந்து குழுவொன்றினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு, களுத்துறை, வவுனியா, புத்தளம், மன்னார், கேகாலை, அம்பாறை, திருகோணமலை ஆகிய நகர சபைகளை மாநகர சபைகளாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதேசசபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் 276 பிரதேச சபைகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.