மக்கள் தொடர்ச்சியாகக் கூறிவந்த ஊழல் மோசடி, குடும்ப ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்கள் அதேபோன்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத அதிகாரிகளின் விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதியின் கொள்கை பிரகடனவுரையில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 135 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தலொன்றில் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தாலும்கூட இந்த ஜனாதிபதி தெரிவானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றது.
எனவே உண்மையில் ஜனாதிபதி தெரிவானது சாதாரண சம்பிரதாயங்களுக்கு அப்பால் வேறு சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே இடம்பெற்றது.
ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனக்கு ஆதரவளித்த பாராளுன்மன்ற உறுப்பனிர்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்து செயற்பட்டார்.
கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு முன்னிலையில் இருந்தது யாவரும் அறிந்ததே.
எனவே இந்த இடத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு, பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் ஏற்பட்ட பிரச்சினை, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பிலான பாரிய நெருக்கடி, மக்கள் வாழ்வாதார பிரச்சினை போன்றவற்றுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எவ்வாற அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி செல்லும் அளவில் மக்கள் எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊழல்,மோசடிகள், அதிகாரிகள் வாதம், குடும்பவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு சாதாரண அரசியல் சம்பிரதாயத்தினூடாகக் கிடைக்கப்போவதில்லை.
முறைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் உள்ளிட்ட பாரிய கோரிக்கைகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு நாட்டை விட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டது.
எனவே புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது கொள்கைபிரடகனவுரையில், முன்னாள் ஜனாதிபதி வெளியேறி செல்வதற்கு அடிப்படையாக இருந்த காரணங்களை கவனத்திற்கொள்ள தவறியுள்ளார் என்பதை கூற வேண்டும்.