இப்படியும் நடக்கிறது…!

0
173

சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துவிட்டது. இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சீனக் கப்பலின் வருகை இடம்பெற்றிருக்கின்றது.
இந்த சர்ச்சைக்குரிய கப்பலின் வருகையை இடைநிறுத்துமாறு இலங்கை கேட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆனால், இலங்கை அவ்வாறு கோரிக்கை விடுத்த பின்னர் என்ன நடந்தது என்பதை தெற்கு ஊடகம் ஒன்று விலாவாரியாக விளக்கி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கின்றது.
அந்தக் கட்டுரையில், சீனா விடுத்த சிவப்பு எச்சரிக்கை குறித்தும், கப்பல் வருகையை அனுமதிக்காவிட்டால், எதிர்காலத்தில் சீனா – இலங்கை உடனான உறவு முற்றாகப் பாதிக்கும் என்றும், சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதுபோல கடன்களுக்கான மறுசீரமைப்பு பேச்சில் இருந்து சீனா முற்றாக விலகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சீனாவின் பதிலடி அத்தோடு நின்றுவிடவில்லை.
கடந்த வாரம் சீனாவில் இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஏற்பாடு செய்திருந்த பெரும் விளம்பரத் திட்டத்தையும் சீனா இரத்துச் செய்திருக்கின்றது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை வளர்த்தெடுத்தால் மாத்திரமே நாட்டின் பிரதான டொலர் வருமானத்தை மீண்டும் தூக்கி நிறுத்தலாம் என்ற நிலையில், உலகெங்கும் பல்வேறு பிரசார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு வருடந்தோறும் கணிசமான சீனர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்துசெல்கின்றனர். இந்நிலையில், சீனர்களை கவரும் வகையில் கடந்த வாரம் பெரும் பிரசார நடவடிக்கைகளை சீனாவில் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கப்பல் பயணத்தை இடைநிறுத்துமாறு இலங்கை கோரிக்கை விடுத்த உடனேயே, சீனா அந்த சுற்றுலா தொடர்பான விளம்பர திட்டத்தையும் இடைநிறுத்தியது.
இலங்கை அரசின் அனுமதி பெறப்பட்ட பின்னரே கப்பல் சீனாவிலிருந்து புறப்பட்டது என்றும், வேறு எங்குமே தரித்து நிற்காமல் கப்பல் இலங்கையை நோக்கி வந்துகொண்டிருப்ப தையும் சுட்டிக்காட்டிய சீனா, இவ்வாறு பலத்த நெருக்கடிகளைத் கொடுத்ததைத் தொடர்ந்தே கப்பல் இலங்கை வர அனுமதிப்பது என்று
இலங்கை முடிவெடுத்தது.
இந்தக் கப்பல் சீனாவின் மக்கள் இராணுவத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி மற்றும் உளவு கப்பல் என்று கூறப்படுகின்றது.
இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நின்றால், இந்தியாவின் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையம் போன்ற இந்தியாவின் முக்கிய தளங்களின் நடவடிக்கைகளை உளவு பார்க்க முடியும் என்றும் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல எனவும் இந்தியத் தரப்பில் சொல்லப்படுகின்றது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்து வருகின்றன.
அவர்களின் இந்தக் கரிசனையும் நியாயமானதுதான்.
ஆனால், இந்த ஊர்க்குருவியை உறுத்துகின்ற விடயம் வேறு ஒன்று சம்பந்தமானது.
அம்பாந்தோட்டை துறைமுகம் இப்போது சீனாவின் நிர்வாகத்தில் இருக்கின்றது.
இந்தக் கப்பலில் இருக்கின்ற உளவு பார்க்கக்கூடிய உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வருவதோ அல்லது அவற்றை துறைமுகத்தில் உள்ள அவர்களின் அலுவலகம் ஒன்றில் வைத்திருப்பதோ சீனாவுக்கு பெரிய விடயமல்ல.
இந்தியாவை உளவு பார்ப்பதற்காக இத்தனை சிரமங்கள்பட்டு ஒரு கப்பலைக் கொண்டு வந்துதான் சீனா உளவுபார்க்க வேண்டுமா? அந்தக் கப்பலில் உள்ள உபகரணங்களைப்போல வேறு உபகரணங்களை அந்த துறைமுகத்தில் நிரந்தரமாகவே வைத்திருக்க சீனா விரும்பினாலும் அதற்கு சாத்தியமில்லையா என்று
கொழும்பிலுள்ள ஒரு பாதுகாப்பு விவகார ஆலோசகர் ஒருவரைக் கேட்டேன்.
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், ஏன் முடியாது? அதிகம் ஏன் இப்போது அங்கே இல்லை என்றுகூட உறுதியாக சொல்ல முடியாதே என்கிறார் அவர்.
இப்போது, இத்தனை சிரமப்பட்டு ஏன் அந்தக் கப்பலை கொண்டுவருகின்றது சீனா என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன்.
உங்கள் இரகசியங்களை நாங்கள் பெறக்கூடிய நிலையில்தான் இருக்கின்றோம் என்று இந்தியாவுக்கு சொல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்.
‘இதற்குத்தானே எங்கள் தலைவர்கள் திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு உரிமையை பெற்றுத்தாருங்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் கவசமாக இருப்போம் என்று’. அந்த தெற்கின் பாதுகாப்பு விவகார ஆலோசகரிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன்.!

  • ஊர்க்குருவி.