வடமராட்சி கிழக்கு அம்பன் மருத்துவமனையின் நிலை : கவனத்தில் எடுப்பார்களா அதிகாரிகள்!!

0
344

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக மருத்துவர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்வதில்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் மருத்துவர் 24 மணிநேரமும் கடமையில் ஈடுபடுவதற்கு விடுதிவசதி செய்யப்பட்டும், மருத்துவர் ஒருநாள் கூட அங்கு தங்கியருந்து பணியாற்றுவதில்லை என தெரிவித்துள்ள பிரதேச மக்கள்
குறித்த மருத்துவ மனை திறம்பட செயற்பட ஆவண செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது விடயமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட, துறைசார் அதிகாரிகளுடன் பல தடவைகள் பேசியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
இந்தநிலையில் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய தினம் மருத்துவரும் இல்லாத நிலையில், நோயாளர் காவு வண்டியும் இல்லாத நிலையில் அவசரமாக சிகிச்சையளிக்கப்படவேண்டிய நோயாளி ஒருவர் ஒரு மணித்தியாலத்தின் பின் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் பிற்பகல் நான்கு முப்பது மணியளவில் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இருந்து திடீரென நோய்வாய்ப்பட்ட ஒருவரை அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு மருத்துவர் கடமையில் இல்லை. இதேவேளை குறித்த மருத்துவமனை நோயாளர் காவு வண்டியும் இல்லாத நிலையில், ஒரு மணித்தியாலம் காத்திருந்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வரவளைக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளரை அனுப்பி வைத்துள்ளனர்.
அம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு மருத்துவர்களுக்கான ஆளணி வெற்றிடம் இருக்கின்றபோதும், தற்போது ஒரு பெண் மருத்துவ அதிகாரி மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மருத்துவர் காலை 9.00 மணியிலிருந்து சனி, ஞாயிறு தவிர்ந்த நாட்கள் 4.00 மணிவரையும் கடமையில் உள்ளார். மருத்துவரது கடமை நேரத்திற்கு முன்னரும், பின்னரும் சிகிச்சை பெறுவதற்காக செல்பவர்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டு வருவதாகவும்,
குறித்த வைத்தியசாலையில் நீண்டகாலமாக மருத்துவர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்வதில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாவட்ட பிராந்திய சுகாதார தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பிரதேச வைத்தியசாலைக்கு இரண்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மருத்துவமனையில் நோயாளர் காவு வண்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தம் செய்வதற்கான நிதி இன்மை காரணமாக வாகன திருத்தகம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றவேளை மருத்துவமனையில் கடமையிலிருந்த ஒரே பணியாளரும் நோயாளர் காவு வண்டியில் சென்ற நிலையில,; அயலில் உள்ளவர்கள் மருத்துவமனையில் திறந்திருந்த கதவுகளை பூட்டி 6.30 மணிக்கு பின்னர் கடமைக்கு வந்த பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி ஒன்றும் வைரலாகியுள்ளது.