மட்டு.திருப்பெருந்துறை குப்பைமேடு
பகுதி புகை காரணமாக மக்கள் பாதிப்பு

0
204

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை குப்பைமேடு பகுதியில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்டுள்ள புகை காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
கடந்த 13ஆம் திகதி முதல் திருப்பெருந்துறை திண்மகழிவு முகாமைத்துவ நிலையத்தில் ஏற்பட்ட தீ மற்றும் புகை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோதிலும் குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திலிருந்து வெளியேறும் புகை காரணமாக அருகில் உள்ள தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குப்பை மேட்டிலிருந்து வெளியேறும் புகை சுவாசத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாகவும் இதன்காரணமாக தம்மால் கற்றல் செயற்பாடுகளை முறையாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அருகில் உள்ள தொழில்பயிற்சி நிலைய மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் மற்றும் குறித்த பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் குறித்த பகுதிகளின் நிலைமைகளை சீர்படுத்தி கற்றல் நடவடிக்கைகளுக்கு வழியேற்படுத்தி தருமாறு உரியவர்களிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
கொடுவாமடுவில் குப்பைகொட்டுவதற்கான இடம் வழங்கப்பட்டுள்ளபோதும் இந்த திண்மக்கழிவு நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதனால் இந்த பாதிப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த திண்மக்கழிவு நிலையத்தில் குப்பைகள் கொட்டப்படுவதில்லையெனவும் உக்கும் கழிவுகள் கொண்டுவரப்பட்டு மீள்சுழற்சி செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த பகுதியில் ஏற்பட்ட தீ முற்றாக கட்டுப்பாட்டினகீழ் கொண்டுவரப்;பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் எனவும் மட்;டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

குறித்த குப்பைகளை தனியார் துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வழங்கும்போது இங்கு கழிவுகள் கொண்டுவரும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.