இப்படியும் நடக்கிறது…!

0
174

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கின்றது. ஆனால், அது சர்வகட்சிகளும் உடன்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.
பிரதான எதிர்க்கட்சி அதற்கு உடன்படுவதாக இல்லை என்பது தெரிந்ததே.
முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, மே ஒன்பதாம் திகதி அப்போதைய பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியதும், சஜித் பிரேமதாஸவையே பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுத்தார்.
அதனை சஜித் நிராகரித்த பின்னரே அவர் ரணில் விக்கிரமசிங்கவை அந்தப் பதவியில் நியமித்தார்.
அவ்வாறு ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டதும், நிலைமையைப் புரிந்துகொண்ட சஜித், பிரதமர் பதவியை ஏற்க முன்வந்தபோதிலும் அது காலம் கடந்த கோரிக்கையாகியது.
பின்னர், ரணில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டியிட்டபோது தானும் போட்டியிடப்போகிறார் என்று அறிவித்திருந்த சஜித் கடைசி நேரத்தில், அதுவும் முதல்நாளன்று போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இவையெல்லாம் சஜித்தின் ‘துணிச்சல்மிக்க’ அரசியலுக்கு சான்றுகளாக அமைந்தமை வேறு கதை.
இப்போது, ரணில் நாட்டில் காணப்பட்ட ‘கியூ’ யுகத்தை இல்லாமல் பண்ணியதோடு, ரணிலால் மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கமுடியும் என்ற நம்பிக்கையை – ஆகக்குறைந்தது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியிலிருந்தாவது பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.
இப்போது பலரும் எதிர்பார்ப்பது, வெறுமனே பொதுஜன முன்னணி ஆட்சியாக ரணில் அரசு தொடர்வதை விடுத்து சகல கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு ஒரு சர்வகட்சி அரசாங்கமாக பாராளுமன்றத்தின் எஞ்சிய காலத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே.
அதனையே பலரும் இப்போது வலியுறுத்தி வருவதையே காணமுடிகின்றது.
ஆனால், சர்வகட்சி அரசு என்றால் அதில் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தியும் இடம்பெறுவது மாத்திரமே சர்வட்சி அரசு என்ற இலக்கை முழுமையாக அடைவதற்கு உதவும்.
ஆனால், சஜித் பிரேமதாஸவோ அவ்வாறு சர்வகட்சி அரசில் இணைந்துகொள்ளும் முடிவில் இல்லை என்பதை திரும்பத் திரும்பக் கூறிவருகின்றார்.
தானும் முடிந்தவரை சஜித் அணியையும் சேர்த்துக் கொண்டு செல்வதற்கே விரும்புவதாக- குறைந்த பட்சம் அவ்வாறு காட்டிக் கொள்வதற்காகவாவது அவருக்கு தொடந்து அழைப்பு விடுத்து வந்தார் ரணில். அதனால்தான் நேற்று முன்தினமும் ரணில் – சஜித் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது சஜித் ஒரு விடயத்தை தெளிவாகத் தெரிவித்திருப்பதாக அவரின் தரப்பிலிருந்து தெரியவந்தது.
தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற ஸ்தானத்திலேயே அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும்வரை இருக்கப் போகிறாரெனவும், அதற்காக அரசாங்கம் செய்கின்ற நல்ல காரியங்களுக்கு ஆதரவு வழங்க தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ள சஜித், அரசாங்கத்தில் இணைந்து கொண்டால் அரசாங்கம் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்ட முடியாத நிலை ஏற்படும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறாராம்.
அரசாங்கத்தில் அதுவும் ஒரு சர்வகட்சி அரசாங்கத்தில் இருந்துகொண்டு, அரசாங்கம் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்ட முடியாது என்ற சஜித்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாத ரணில், நீங்கள் அரசில் இருந்தால், தவறான விடயங்களே நடக்காமல் தடுக்கலாம்தானே என்று அவருக்குக் கூறியபோதிலும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.
சர்வகட்சி அரசுக்கு ஆதரவு என்றும் ஆனால், அதில் இடம்பெறப்போவதில்லை, அரசின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவேன் எனவும் அவர் திரும்பவும் தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நல்லதை ஆதரிப்பேன் என்றும் தவறானதை எதிர்ப்பேன் எனவும்தான் எந்த எதிர்க்கட்சியும் கூறலாம்.
எதிர்க்கட்சி என்றால் நல்லதையும் எதிர்க்க வேண்டும் என்பதல்லவே.
பின்னர் எதற்காக சர்வகட்சி அரசுக்கு அதரவு என்று அவர் சொல்கின்றார் என்பது அவருக்கு மாத்திரமே வெளிச்சமானது.
சஜித்துடனான அந்தச் சந்திப்பில் ரணில் ஒரு விடயத்தை தெளிவாகத் தெரிவித்து அவரை அனுப்பி வைத்தாராம்.
‘நீங்கள் அரசாங்கத்துடன் சேரவில்லை என்றாலும் உங்கள் தரப்பிலிருந்து பலர் அரசாங்கத்தில் சேருவதற்குத் தயாராக இருக்கின்றார்கள்.
அப்படி சேர விரும்புபவர்களை நான் இணைத்துக்கொண்டால், பிறகு நான்தான் உங்கள் கட்சியை உடைக்கின்றேன் என்று என்மீது குற்றம் சொல்லாதீர்கள்.’ இதுதான் ரணில் சொல்லியனுப்பிய செய்தி.

  • ஊர்க்குருவி.