ஜே.வி.பியின் உண்மை முகம்?

0
225

தேசிய மக்கள் சக்தி என்னும் பெயரில் இயங்கிவரும் ஜே. வி. பி. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு தெரிவித்திருக்கின்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.
இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஜே. வி. பி. மேற்படி அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே ஜே. வி.பியின் கரிசனையாகும்.
ஆனால், இந்த கரிசனை ஏன் இத்தனை காலம் வரவில்லை? இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் என்பதே, அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டம்தான்.
இதனை நீக்குமாறு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றன.
யுத்தம் முடிவுற்று பன்னிரெண்டு வருடங்களாகின்றன.
இந்தக் காலகட்டத்தில் சர்வதேச ரீதியிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு பரவலான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல தமிழர்கள் இப்போதும் சிறைகளில் வாடுகின்றனர்.
அவர்களை விடுவிக்குமாறும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக குரலெழுப்பி வருகின்றன.
ஆனால், இதன்போது எந்தவொரு தென்னிலங்கை கட்சிகளும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததில்லை.
குறிப்பாக, தங்களைப் புரட்சிகர அரசியல் தரப்பாக வலிந்து அடையாளப்படுத்திவரும் ஜே. வி. பியானது ஒருபோதுமே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுடன் தங்களை அடையாளப்படுத்தியதில்லை. ஆனால், இன்று தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்று குரலெழுப்புகின்றது.
தென்னிலங்கையின் இடதுசாரிகளை முற்போக்காளர்களாகவும், தமிழ் மக்களின் ஆதரவாளவர்களாகவும் பார்க்கும் ஒரு போக்கு இப்போதும் சில தமிழர்களிடம் உண்டு.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்திருந்ததும் உண்மைதான். ஆனால், காலப்போக்கில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.
சிங்கள பெருந்தேசியவாத எழுச்சிக்குள் அனைவருமே கரைந்து போனதுதான் வரலாறானது.
இன்று முற்போக்காளர்கள் என்று கூறுமளவுக்கு தென்னிலங்கையில் எவருமில்லை.
ஜே. வி. பி. தங்களை இப்போதும் இடதுசாரிகளாகவும் புரட்சிகர அரசியலுக்கு சொந்தக்காரர்களாகவும் முன்னிலைப்படுத்தி வருகின்றது.
அது உண்மையானால், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக தென்னிலங்கையில் குரல்கொடுக்கும் அமைப்பாக ஜே. வி. பி. தன்னை நிரூபித்திருக்க வேண்டும்.
இன்று வரையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் ஏனைய தென்னிலங்கைக் கட்சிகள் போன்றே ஜே. வி.பியும் அமைதி காத்து வருகின்றது.
வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவிதாரண போன்றவர்களின் அரசியல் வங்குரோத்து நிலைமையானது, தென்னிலங்கையின் இடதுசாரி அரசியலுக்கு நல்ல உதாரணங்களாகும்.
ஒரு தமிழ் தலைமுறையே பயங்கரவாத தடைச் சட்டத்தாலும் அவசரகால சட்டத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இதன்போது தென்னிலங்கையின் எந்தவொரு முற்போக்கு சக்தியும் தமிழ் மக்களின் வலிகளை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.
இப்போது அந்த பயங்கரவாத தடைச் சட்டம் அரசுக்கு எதிரான சிங்கள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்போது அதனை நீக்குமாறு கோருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
ஆனால், அதனை வெறும் இனவாத கண்கொண்டு நோக்குவதையே நாம் எதிர்கின்றோம்.