போராட்டக்காரர்களின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது என்பது பாரதூரமான நிலைமை – சட்டத்தரணி சேனக்க பெரேரா

0
129

நாட்டு மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்த, நாட்டில் எழுந்த பிரச்சினைகளுக்காக குரல்கொடுத்தவர்களின் புகைப்படங்களை ஊடகங்களின் வாயிலாக வெளியிட்டு அவர்கள் தொடர்பில் தகவல் தருமாறு கோருவது பாரதூரமான விடயமர்கும என்று சட்டத்தரணி சேனக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உண்மையில் எமது நாட்டில் அரசியலமைப்பு என்ற ஒன்று காணப்படுகின்றது.

அதில் ஒரு விடயம் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் குற்றவாளி என நிருபிக்கப்படும்வரை அவர் நிராபராதியாகவே மதிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியிலும் இந்த விடயமே நடைமுறையில் உள்ளது.

அவ்வாறான ஒரு நடைமுறை அரசியலமைப்பில் இருக்கும்போதே ஊடகங்களில் சிலரது புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குற்றவாளிகளாக முத்திரைக்குத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு ஊடகங்களின் வாயிலாக புகைப்படங்களை வெளியிடும்போது அவர்களால் சமூகத்தில் தலைகாட்ட முடியாது.

சமூகத்தில் இவர்களுக்கு எதிராக பாரிய எதிர்ப்புகள் கிளம்பும்.

தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். குற்றம் இழைத்தவர் என்று கூறி தொழில்புரியும் இடங்களில் இருந்தும் இவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

அவர்களது பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். உங்களது பெற்றோர் குற்றவாளிகள் என்று பாடசாலைகளில் மாணவர்களுக்கு கூறும் நிலைமை ஏற்படும்.

இது உண்மையில் ஒருவரின் சிறப்புரிமைகளை மீறும் செயற்பாடாகும்.