முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் முதல் விசேட பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்குச் செல்ல தாய்லாந்து பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனைக் கேட்டு கோட்டாபய ராஜபக்ச மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது மனைவியுடன் தப்பியோடினார். முதலில் மாலைதீவுக்குச் சென்ற அவர் பின் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து, பதவி துறப்புச் செய்தியை அனுப்பியிருந்தார். தற்போது அவர் தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்து பாங்கொக்கில் உள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், பாதுகாப்புக் கருதி அவர் விடுதி அறையை விட்டு வெளியே வர முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளார். இதனால் வெளி உலகத்தை பார்க்க முடியாமல் தவிப்பதாகவும், இந்த விடுதி அறையில் முடங்கி இருப்பது சிறையில் இருப்பது போன்று உணர்வைத் தருவதாக அவர் கடந்த நாட்களில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்த வாரம் முதல் விசேட பாதுகாப்புடன் தேவையான இடங்களுக்குச் செல்ல தாய்லாந்து பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.