சந்தையில் முட்டை மற்றும் கோழி குஞ்சுகளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும்

0
166

எதிர்வரும் நாட்களில், சந்தையில் முட்டை மற்றும் கோழி குஞ்சுகளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கோழிக் குஞ்சுகளை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்களை விடுவிப்பதில் சவால்களை எதிர்நோக்குவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், விலங்கு தீவணத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக, உற்பத்தியாளர்கள் குறித்த தொழில்துறையில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழிக் குஞ்சுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர். முட்டைக்கான உச்சபட்ச சில்லறை விலையை அறிவித்து அண்மையில் நுகர்வோர் அதிகார சபையினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்று 43 ரூபாவிற்கும், சிவப்பு முட்டை ஒன்று 45 ரூபாவிற்கும் விற்கப்பட வேண்டும் என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, 50 ரூபாவிற்கு குறைவாக முட்டையை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்காதிக்க வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வாய்மொழி மூலம் இணங்கியுள்ளதாக குறிப்பிட்டார். முட்டை உற்பத்தியாளர்கள் தாங்கள் எண்ணியவாறு விலையை அதிகரித்து சென்றனர். முட்டை ஒன்றின் விலை 100 ரூபா வரையில் செல்லும் நிலை காணப்பட்டது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே வர்த்தக அமைச்சர் வர்த்தமானியை வெளியிட்டிருந்தார். எனினும், குறித்த கட்டுப்பாட்டு விலை தொடர்பில் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில், வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.